மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து நாளை கடலூர் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெறும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்ட குழுவின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பட்ஜெட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் பெருமுதலாளிகளுக்கும் ஆதரவாக வரிச்சலுகைகளை வழங்கிவிட்டு, ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், உழைப்பாளிகள் என அனைத்துப்பகுதி மக்கள் மீதும் வரிச்சுமைகளை ஏற்றியுள்ளது.
மேலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் தமிழகம், கேரளம் உள்ளிட்டு எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணித்து அரசியலமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது.
இதனை கண்டித்து பிப்ரவரி 4ம் தேதி, கடலூர் மாவட்ட முழுவதும் வட்ட தலைநகரங்களான கடலூர், சிதம்பரம், விருதாச்சலம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, புவனகிரி, காட்டுமன்னார்குடி, திருமுட்டம், திட்டக்குடி, வேப்பூர், நெய்வேலி ஆகிய இடங்களிலும் கட்சியின் சார்பில் மாபெரும் கண்டனப் போராட்டம் நடைபெறும்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சி அணிகளும், அனைத்துப் பகுதி பொதுமக்களும், வணிகர்களும், ஜனநாயக இயக்கங்களும் கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.