செங்கல்பட்டு மாவட்டத்தில் மணிலா விதைகளை சட்ட விரோதமாக விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், செங்கல்பட்டு மாவட்டத்தில் நடப்பு ரபி பருவத்தில் 6000 எக்டருக்கு மேல் வேர்கடலை (மணிலா) பரவலாக பயிரிடப்படுகிறது. நிலையான மகசூல் பெற தரமான விதைகள் அத்தியாவசியமாகிறது. வேளாண்மை துறை கிடங்குகள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் விதை விற்பனையாளர்களிடம், தரமான சான்று அளிக்கப்பட்ட மணிலா விதைகளை வாங்கி விதைப்பு செய்திட விவசாயிகளை அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தற்போதைய விதைப்பு பருவத்தினை பயன்படுத்தி உரிமம் பெறாத விற்பனையாளர்கள் மணிலா விதைகளை சட்டவிரோதமாக விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு விதை ஆய்வு துறை மூலம் தொடர் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் மணிலா பயிரில் நிலையான பயிர் வளர்ச்சி மற்றும் மகசூல் பெற்றிட உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடமிருந்து மட்டுமே இரசீது பெற்று விதைகளை வாங்கிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும், தகுந்த விதை விற்பனை உரிமம் பெறாமல் விற்கப்படும் மணிலா விதைகள் விதை ஆய்வுதுறை மூலம் பறிமுதல் செய்யப்பட்டு விற்பனை செய்தவர்கள் மீது விதைச்சட்டத்தின் படி நீதிமன்றத்தின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.