தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வரும் நீர்வளத்துறையின் அனைத்து அறிவிப்புப் பணிகளை துரிதப்படுத்தி அடுத்த ஆண்டு இறுதிக்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவருமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் துரைமுருகன் அறிவுறுத்தியுள்ளார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில், நீர்வளத்துறை பொறியாளர்களுடன் தலைமைச் செயலகத்தில் நேற்று, கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புப் பணிகளின் முன்னேற்றம் குறித்து சிறப்பு கலந்தாய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.
இந்த கலந்தாய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதும் நீர்வளத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் அனைத்து அறிவிப்புப் பணிகளையும் துரிதப்படுத்தி டிசம்பர் 2025க்குள் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறும் மற்றும் நீர்த்தேக்கங்கள், ஏரிகளின் மதகுகளை பராமரிக்கும் பணிகளை தொடர்ந்து கண்காணிக்கும் படியும் பொறியாளர்களுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார். இக் கலந்தாய்வுக் கூட்டத்தில் நீர்வளத்துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் மணிவாசன், திட்ட இயக்குநர் ஜவஹர், நீர்வளத்துறையின் அரசு கூடுதல் செயலாளர், மலர்விழி, முதன்மைத் தலைமைப் பொறியாளர் மன்மதன், சென்னை மண்டல தலைமைப் பொறியாளர் ஜானகி மற்றும் அனைத்து சென்னை மண்டல பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.