Central Government Scheme இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்ணின் வயது 18 முதல் 55-க்குள் இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி கடன் பெற விரும்பும் பெண்கள் இதற்கு முன்பு வாங்கிய கடன்களை முறையாக திருப்பி செலுத்தியவராக இருக்க வேண்டும்.
உத்யோகினி ( Udyogini) என்ற பெயரில் பெண்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.
சமையல் எண்ணெய் வர்த்தகம் செய்ய பெண்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மத்திய அரசு கடன் உதவி வழங்குகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பெண்களுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. அதாவது ரூ.3 லட்சம் கடன் வாங்கினால் ரூ.1.50 லட்சம் மட்டும் திருப்பி செலுத்தினால் போதும்.
இதேபோன்று கடன் பெறும் பெண் சிறப்பு பிரிவினராகவோ அல்லது பொது பிரிவினராகவோ இருந்தால் ரூ.3 லட்சம் கடனில் அதிகபட்சமாக ரூ.90 வரை மானியம் வழங்கப்படும். கடன் பெற்றவர்கள் ரூ.2.1 லட்சத்தை திருப்பி செலுத்தினால் போதும்.
இந்த திட்டத்தில் கிராமத்து பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கு இந்த திட்டத்தில் கடன் பெற அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமன்றி இந்த திட்டத்தின் மூலம் விவசாயம் செய்யும் பெண்களுக்கு வட்டியில்லா கடனும் வழங்கப்படுகிறது.
இந்த திட்டம் வணிக மற்றும் பொதுத்துறை வங்கிகளால் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் வங்கிகளில் வட்டியில்லா கடன் பெறுவது மட்டுமன்றி, இந்த திட்டத்தின் மூலம் சிறப்பு தொழில் மேம்பாட்டு பயிற்சியும் பெறுகின்றனர். இந்த திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சம் கடன் பெற உத்தரவாத ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. இதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
இந்த திட்டத்தில் யார், யார் கடன் பெறலாம்? :
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்பும் பெண்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் அல்லது அதற்கும் குறைவாக இருக்க வேண்டும். தனியாக வாழும் பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த குடும்ப வருமான வரம்பு இல்லை.
இந்த கடனில் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்ணின் வயது 18 முதல் 55-க்குள் இருக்க வேண்டும். அதுமட்டுமன்றி கடன் பெற விரும்பும் பெண்கள் இதற்கு முன்பு வாங்கிய கடன்களை முறையாக திருப்பி செலுத்தியவராக இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள்:
இந்த திட்டத்தின் கீழ் கடன் பெற ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், பிறப்பு சான்றிதழ், முகவரிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ரேஷன் அட்டை, பிபிஎல் அட்டை, சாதி சான்றிதழ், வங்கி பாஸ் புக் நகல் உள்ளிட்ட ஆவணங்கள் கட்டாயம்.
விண்ணப்பிக்கும் முறை:
இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க விரும்பும் பெண்கள் அருகில் உள்ள வங்கிகளுக்கு சென்று உரிய ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். இந்த திட்டத்திற்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
website – https://www.myscheme.gov.in/schemes/us இந்த தளத்தின் வழியே ஆன்லைன் இல் விண்ணப்பிக்கலாம்