செய்யாறு அருகே கடுகனூர் கூட்டுறவு விற்பனையகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான கூப்பன்களை கூட்டுறவு சேல்ஸ்மேனிடம் இருந்து ஊராட்சி மன்ற தலைவர் அத்துமீறி பிடுங்கி எடுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதி கடுகனூர் கிராமம். இக்கிராமத்தில் 437 குடும்ப அட்டைகள் உள்ளது. இக்குடும்ப அட்டைதாரர்களுக்கு கூட்டுறவு கடை எண் எப்பி 043 விற்பனையகத்தில் பொருட்கள் விநியோகம் செய்து வருகின்றனர். இந்த கடையின் சேல்ஸ்மேனாக பில்லாந்தி பகுதியைச் சேர்ந்த சின்னதுரை என்பவர் பணியாற்றி வருகிறார்.
கடுகனூர் கிராமம் மற்றும் கடுகனூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக தமிழக அரசு வழங்கக்கூடிய பொங்கல் பரிசு தொகுப்புக்கான கூப்பன்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
மேல் ஆதிராவிடர் குடியிருப்பு பகுதியில் சேல்ஸ்மேன் சின்னதுரை குடும்ப அட்டைதாரர்களுக்கான பொங்கல் பரிசு கூப்பன் விநியோகம் செய்து வந்த நிலையில். பிற்பகலுக்கு மேல் அங்கு வந்த ஊராட்சி மன்ற தலைவர் சந்தோஷ் குமார் என்பவர் சேல்ஸ்மேனிடம் இருந்து குடும்ப அட்டைதாரர்களுக்கான பட்டியலை பிடுங்கி எங்கள் பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு கொடுக்க வேண்டும் எனக்கூறி 10 க்கும் மேற்பட்ட கூப்பன்களில் கையெழுத்திட்டு பிடுங்கிக் கொண்டு சேல்ஸ்மேன் இடம் பட்டியலை கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.
ஊராட்சி மன்ற தலைவர் கையெழுத்திட்ட கூப்பன்கள் இறந்த நபர்களுடையது இது செல்லாதது என தெரியவந்துள்ளது.
இது குறித்து சேல்ஸ்மேன் சின்னதுரை உடனடியாக வட்ட வழங்கல் அலுவலர் சங்கீதா மற்றும் கூட்டுறவுத்துறை தனி அலுவலர் முருகேசன் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
ஊராட்சி மன்ற தலைவர் சேல்ஸ்மேன் இடம் இருந்து பட்டியலை மற்றும் கூப்பனை பிடுங்கி சென்றது விசாரணையில் தெரிய வந்தது.
கூப்பனில் 6 நபர்கள் இறந்து விட்டதாக அறியப்படுகிறது. இதனை பயன்படுத்தி பணம் மற்றும் இலவச பொருட்கள் பெறும் நோக்கில் பிடுங்கி சென்று இருக்கலாம். எனவே சம்பந்தப்பட்ட கடையின் குடும்ப அட்டைகள் ஆய்வு செய்து பணம் மற்றும் இலவச பொருட்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் சேல்மேனிடம் அத்துமீறி ஊராட்சி மன்ற தலைவர் கூப்பன்களை பிடுங்கி சென்ற சம்பவம் குறித்து சேல்ஸ்மேன் பெரணமல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.