காசிமேடு மீனவர் வலையில் 300 கிலோ எடையுள்ள ராட்சத மீன் சிக்கியது. இதை கிரேன் மூலம் கரைக்கு கொண்டு வந்தனர்.
சென்னை காசிமேடு பகுதியில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைபர் படகுகளும், 700 க்கும் மேற்பட்ட விசைப் படகுகளும் தினசரி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், ஆழ்கடலில் மீன்பிடிக்கச் சென்ற 200 படகுகள் நேற்று அதிகாலை கரை திரும்பின. வவ்வால், வஞ்சிரம், சங்கரா உள்ளிட்ட மீன்கள் அதிகளவு பிடிக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.
ஒரு விசைப் படகில் 300 கிலோ எடையும், 15 அடி நீளமும் கொண்ட ‘ஏமன் கோலா’ என்ற ராட்சத மீன் இருந்தது. இந்த மீனை மீனவர்கள் கிரேன் மூலம் படகில் இருந்து கரைக்கு கொண்டு வந்தனர்.
இதுகுறித்து, மீனவர்கள் கூறியதாவது
‘‘ஆழ்கடலில் மீன் பிடித்த போது இந்த ராட்சத ‘ஏமன் கோலா’ மீன் பிடிபட்டது. இதைக் கஷ்டப்பட்டு படகில் ஏற்றி கரைக்கு கொண்டு வந்தோம். கேரளா மற்றும் இலங்கையில் இந்த மீன் விரும்பி உண்ணப்படுகிறது. இந்த மீனை ஏலம் மூலம் விற்பனை செய்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய உள்ளோம்’’ என்றனர்.