நேற்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்தது
தமிழகம் முழுவதும் நேற்று முன்தினம் சென்னையை நோக்கி புறப்பட்ட விரைவு பேருந்துகள் அனைத்தும் நேற்று காலை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை வந்தடைந்தன.
ரயில்கள் மூலம் நகரின் பல பகுதிகளுக்குச் செல்ல விருந்த பயணிகளை, பொத்தேரி ரயில் நிலையத்தில் நடத்துநர்கள் இறக்கிவிட்டனர். அதேபோல், கிளாம்பாக்கம் வந்தடைந்தவர்கள் அங்கிருந்து மாநகர பேருந்துகள் வாயிலாக நகரின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றனர். இதற்காக நேற்று காலை முதலே மாநகர பேருந்துகளும் கிளாம்பாக்கத்தில் இருந்து இயங்கத் தொடங்கின.
சென்னை – திருச்சி நெடுஞ்சாலை வழியாக இயக்கப்படும் அனைத்து விரைவு பேருந்துகளும் நேற்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டன. திருச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மார்த்தாண்டம், களியக்காவிளை, தென்காசி, செங்கோட்டை, விருதுநகர் உள்ளிட்ட பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே இயக்கப்படும். கும்பகோணம், சேலம், விழுப்புரம் உள்ளிட்ட இதர போக்குவரத்துக் கழக பேருந்துகள் ஜன.15ஆம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படுகின்றன. இது தவிர்த்து, பெங்களூர் நெடுஞ்சாலை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக இயக்கப்படும் பேருந்துகள் மட்டுமே கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்து இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டதால் கோயம்பேடு பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
கோயம்பேடு பேருந்து இயக்க வளாகத்தில் பேருந்து தொடர்பான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. கோயம்பேட்டில் பேருந்துகள் இயக்கப்படவில்லை எனவும், கிளாம்பாக்கத்துக்கு வருமாறும் நடத்துநர்கள் பயணிகளைத் தொடர்பு கொண்டு அறிவுறுத்தினர். பயணிகள் வர தாமதமானாலும் காத்திருந்து அவர்களை அழைத்துச் செல்லுமாறு நடத்துநர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன.
ஜனவரி 31ஆம் தேதி வரை கோயம்பேட்டில் இருந்து பயணிக்கும் வகையில் முன்பதிவு செய்திருப்போருக்கான வித்தியாசத் தொகை, பயணம் முடிவடைந்த பிறகு அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து இயக்கம் தொடர்பான விவரங்களை 78457 00557, 78457 27920, 78457 40924, 78457 64345 676001 560611 தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.