பெரியார் பல்கலைக் கழகத்தின் பல்வேறு பணிகளை மேற்கொள்வதற்காக சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் அரசு பணத்தை முறைகேடு செய்ததாக எழுந்த குற்றசாட்டில் சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் கைது செய்யப்பட்டுள்ளார். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் ஜெகநாதன்.
பல்கலைக் கழகத்தினால் மேற்கொண்ட பல்வேறு பணிகளுக்காக விதிகளை மீறி சொந்தமாக ஒரு நிறுவனத்தை தொடங்கி அதன் மூலம் அரசு பணத்தை முறைகேடாக பயன்படுத்தியதாக பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சட்ட ஆலோசகராக இருந்த இளங்கோவன் என்பவர் கருப்பூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.
துணைவேந்தர் ஜெகநாதன் அரசு அதிகாரியாக இருந்து கொண்டு விதிகளை மீறி நிறுவனம் தொடங்கி, பல்கலைக்கழக அதிகாரிகளை கொண்டே அந்த நிறுவனத்தை செயல்பட வைத்தது அதன்மூலம் அரசு பணத்தை தவறாக பயன்படுத்தியதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து, துணைவேந்தர் ஜெகநாதனை கருப்பூர் போலீசார் நேற்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சில புகார்கள் கூறப்பட்டிருந்த நிலையில், அவற்றின் மீதும் வழக்குகள் பதிவு செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியானது. எனினும், வழக்கு விவரங்களை போலீசார் வெளியிடவில்லை என்பது குறிப்பிடதக்கது.